பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் கவிழ்ந்த சுற்றுலா கார்... கேரளாவை சேர்ந்த 4 பேரின் நிலை என்ன?
பொள்ளாச்சி அருகே கேரள மாநிலத்தினர் காரில் சுற்றுலா சென்றபோது அங்குள்ள வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேரின் நிலை தெரியவில்லை.
பொள்ளாச்சி: கேரள மாநிலத்தில் பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்ற போது அங்குள்ள 11 அடி ஆழ வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் மீட்கப்பட்டார். எனினும் 4 பேரின் நிலை தெரியவில்லை.
கேரள மாநிலம், எர்ணாகுளம் அங்கமானியைச் சேர்ந்தவர் ஆல்பா (19). பட்டதாரி. இவரது நண்பர்கள் ஜூதின் ஜோய் (24), ஜாக்சன்(21),அமல் (20), லிஜோ (27).
இவர்களில் ஜூதின் ஜோய் துபாயில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். மேற்கண்ட 4 பேருடன் சேர்ந்து ஜூதின் ஜோயும் கடந்த 7-ஆம் தேதி மூணாறுக்கு காரில் சுற்றுலா வந்தனர்.
பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து விட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். காலை 7.15 மணியளவில் அவர்களது கார் பொள்ளாச்சி அருகே உள்ள கெடிமேடு பி.ஏ.பி. வாய்க்கால் பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பாலத்தின் தடுப்புச் சுவரை இடித்து கொண்டு கார் வாய்க்காலில் பாய்ந்தது. வாய்க்காலில் சுமார் 11 அடிக்கு தண்ணீர் உள்ளதால் கார் மூழ்கியது.
கார் வாய்க்காலில் பாய்ந்த போது அதன் பின்பக்க கதவு திறந்து கொண்டது. இதனால் அதிலிருந்து வெளியே வந்த ஆல்பா தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வாய்க்காலில் குளித்து கொண்டிருந்த மன்னார்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஆல்பாவை காப்பாற்றினார்.
எனினும் ஜூதின் ஜோய், ஜாக்சன், அமல் , லிஜோ ஆகிய 4 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தகவலறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் காரை தேடி வருகின்றனர்.