அவிநாசி அருகே பஸ் மோதி பாலத்திலிருந்து கவிழ்ந்த கார்.. பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டம் அவிசாசி அருகே பேருந்து மீது கார் உரசி மேம்பாலத்தில் இருந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
திருப்பூர் : அவிநாசி அருகே அரசுப்பேருந்து மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து சொகுசு கார் ஒன்று கோவையை நோக்கி சென்றுள்ளது.
காரில் டிரைவர் உள்பட 6 பேர் பயணித்தனர். இவர்கள் இன்று காலை திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தெக்கலூர் கோவை-ஈரோடு 6 வழிச்சாலையில் வந்துகொண்டிருந்த போது அந்த வழியில் வந்த அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியுள்ளது. பஸ் மோதிய வேகத்தில் கார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.
இதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய கார் அரசு வாகனம் என்றும் அமைச்சர் ஒருவரது உறவினர்கள் இவர்கள் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.