பழனி: பங்குனி உத்திர தேரோட்டம்… தீர்த்த காவடி எடுத்து திரண்டு வந்த பக்தர்கள்
பழனி: பங்குனி உத்திரத் திருவிழாவை ஒட்டி பழனியில் நடைபெற்ற திருத்தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பங்குனி உத்திர திருவிழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்த காவடிகள் சுமந்து வந்து முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
பழனி பங்குனி உத்திரத் திருவிழா திருஆவினன்குடி கோயிலில் கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, தங்க சப்பரம், தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளித்தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்சியான 6-ம் நாள் திருவிழாவாக திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது.
திருத்தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வடக்கு கிரிவீதியில் நடைபெற்றது. இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான குவிந்தனர்.
முன்னதாக, அதிகாலை 4.30 மணிக்கு சண்முகாநதியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமி தேர் ஏற்றம் செய்யப்பட்டார்.
முத்துக்குமாரசாமிக்கு ஆராதனை
மாலை 4.20 மணிக்கு திருத்தேரில் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த தம்பதி சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு மகாதீபாராதனை நடத்தப்பட்டது.
வடம் பிடித்த பக்தர்கள்
பின்னர், அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "அரோகரா' கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை கோயில் யானை கஸ்தூரி பின்னேயிருந்து தள்ளியது.
பக்தர்கள் அரோகரா முழக்கம்
தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் கைதட்டி "அரோகரா' என கரகோஷம் எழுப்பினர். இரவு 9 மணியளவில் சுவாமி தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நடைபெற்றது.
தீர்த்தக்காவடி
விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பால், இளநீர், கரும்பு காவடி எடுத்தும், கொடுமுடி தீர்த்தம் எடுத்தும், சேவல்கள் கொண்டு வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நீண்ட வரிசையில் பக்தர்கள்
ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்தனர். மலைக்கோயில் படிவழிப்பாதை, வின்ச், ரோப்கார் போன்ற பகுதிகளிலும், மலைக்கோயிலில் இலவச மற்றும் கட்டண தரிசன வரிசைகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர்.
20 மணிநேரம் காத்திருப்பு
திருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் சுவாமி தரிசனம் செய்ய 2 மணிநேரம் ஆனது. அவ்வப்போது அபிஷேகத்திற்காக பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதையடுத்து ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ்புத்தாண்டு
பங்குனி உத்திரத்தை தொடர்ந்து தமிழ்புத்தாண்டு தினமும் வருவதால் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் பழனியில் குவிந்தனர்.
மயில்வாகனத்தில் முருகன்
திங்கள்கிழமை (ஏப்ரல் 14) தங்கக்குதிரை வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை வெள்ளிப்பிடாரி மயில் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
தங்கத்தேர் புறப்பாடு
பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி மலை அடிவாரத்தில் வெள்ளித்தேர், திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றதை ஒட்டி மூன்று தினங்கள் மலை மீது தங்கத்தேர் புறப்பாடு நடைபெறவில்லை.
இந்த நிலையில் புதன்கிழமை மலைக்கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்ற பின் திருஆவினன்குடியில் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.