சென்னையில் சட்ட விரோத கார் பந்தயம்.. 150 கி.மீயில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்கள்.. போலீஸ்காரர் காயம்!
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில், கார் பந்தயத்தில் ஈடுபட்டு அதிகவேகமாகச் சென்றதாக 9 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த சட்டவிரோத கார் ரேஸைத் தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரின் கால் மீது காரை ஏற்றிச் சென்றுள்ளனர் இந்த கொடுமைக்காரர்கள். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கானத்தூர் அருகே போலீஸார் நேற்று நள்ளிரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 150 கி.மீ மின்னல் வேகத்தில் 20க்கும் சொகுசு கார்கள் சீறி பாய்ந்து வந்து கொண்டிருந்தன.
சீறிப் பறந்த கார்கள்
போலீஸார் அவற்றை தடுத்து நிறுத்த முயன்றபோது அவை நிற்காமல் வேகமாகச் சென்றன. அப்போது ஒரு கார் கானத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சௌந்திரராஜனின் கால் மீது உரசிவிட்டு சென்றது.
உத்தண்டியில் பிடிபட்ட 9 கார்கள்
தகவலறிந்த உத்தண்டி போலீஸார் 9 கார்களை மடக்கிப் பிடித்தனர். எனினும் மேலும் 6 கார்கள் நிற்காமல் சென்றுவிட்டன. இதையடுத்து, கானத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கார் உரிமையாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விஐபிகளின் மகன்கள்
நடத்திய விசாரணையில், அவர்கள் புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களின் மகன்கள் என்பது தெரியவந்தது.
காலில் காரை ஏற்றியவர் கைது
இந்த நிலையில், ஆய்வாளரின் காலில் ஏற்றிவிட்டு காரை நிறுத்தாமல் சென்றதாக காரை ஓட்டிய ராகவ்கிருஷ்ணாவை போலீஸார் கைது செய்தனர்.
பல கோடி மதிப்பிலான கார்கள்
கைப்பற்றப்பட்ட லம்போர்கினி, பென்ஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 கோடி இருக்கும் என்று தெரிகிறது.