கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் இரங்கல்
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.
சென்னை: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பால முரளி கிருஷ்ணா மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 81 வருடங்களாக இசையால் மக்களை மகிழ்வித்தவர் பால முரளி கிருஷ்ணா என குறிப்பிட்டுள்ளார். இசையால் பல லட்சம் பேரை வசீகரித்த 'மகா குரு' முரளி கிருஷ்ணா எனவும் அவர் மறைந்தாலும் அவரது இசை இந்த உலகில் ஒலித்துகொண்டே இருக்கும் எனவும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
81 yrs Mahaguru Dr. Balamurali enthralled millions with music.Thanks 2 technology even death cant silence his voice.Pranam guruji & goodbye
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2016
இதனிடையே மறைந்த இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கர்நாடக இசையின் இமயமாக திகழ்ந்தவர் பால முரளி கிருஷ்ணா என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
RIP #Balamuralikrishna sir. Legend of the Carnatic Music world. Heartfelt condolences to his family.
— Dhanush (@dhanushkraja) November 22, 2016
வாணி ஜெயராம் கூறுகையில், உலகம் பார்த்து பிரமிக்கும் இசைக்கலைஞர். தான் என்ற கர்வம் இல்லாதவர். கிருஷ்ணாவின் மறைவு உலக இசைக்கே பேரிழப்பு. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் எனக் கூறியுள்ளார். பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் தனித்துவம் வாய்ந்தது என புஷ்பவனம் குப்புசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.