'திருவாளர் பொதுஜனம்' .. அழிக்க முடியாத சித்திரத்தை விட்டுச் சென்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன்!
சென்னை: இந்திய ஊடகத்துறையில் 60 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தமது 'திருவாளர் பொதுஜனம்' (Common man) எனும் சித்திரம் மூலம் நாட்டு நடப்புகளை கேலிச்சித்திரங்கள் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியவர் மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் (வயது 94).
ஊடக உலகம் கொண்டாடும் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணனின் தந்தை கிருஷ்ணசாமி அய்யர் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மைசூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
மைசூரில் 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி லட்சுமணன் பிறந்தார். அவருக்கு மறைந்த பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் உட்பட 5 சகோதரர்கள் இருந்தனர்.
சிறு வயதிலேயே வீட்டு சுவர் மற்றும் கதவுகளில் கேலியாக ஓவியம் வரையத் தொடங்கினார் லட்சுமணன். பின் தான் படித்த பள்ளியில் ஆசிரியர்களை பற்றி கேலி சித்திரம் வரைந்தார். ஆசிரியர்கள் இவரது திறமையை கண்டு, அவரை மேலும் வரைய ஊக்குவித்தனர்.
பள்ளிப்படிப்பை முடித்த இவர் மும்பையில் உள்ள தனியார் ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து மைசூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றார். படிக்கும்போதே தனது கார்ட்டூன் திறமையை வளர்த்துக் கொண்டார்.
முதன்முதலில் கன்னட பத்திரிகையில் கார்ட்டூன் வரைய ஆரம்பித்தார். பின் டைம்ஸ் ஆப் இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட் ஆகி பிரபலமடைந்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் லட்சுமணின் கார்ட்டூன்களில் தவறாமல் ஒரு சித்திரம் இடம்பெறும். அதுதான் 'Common Man' என்றழைக்கப்படும் 'திருவாளர் பொதுஜனம்". அந்த 'சாமானிய மனிதனி'ன் பார்வையில் தமது கருத்தை வெளிப்படுத்துவதை பாணியாகக் கொண்டிருந்தார் லட்சுமணன்.
அந்த 'சாமானிய மனிதன்' சித்திரம் மூலமாக அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் பிரச்னையின் உண்மைத் தன்மையை அற்புதமாக வெளிப்படுத்தும் வகையில் அவரது கார்ட்டூன்கள் அமைந்தன.
இந்த கேலி சித்திரங்கள் எவரது மனதையும் புண்படாத ஒரு கண்ணியமானதாக இருக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து 'தவமாக' கடைபிடித்தவர் ஆர்.கே. லட்சுமணன்.
இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்ம விபூஷண் விருதை வழங்கி கவுரவித்தது. பத்திரிகை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியவர்களுக்கான மகசேசே விருதினையும் ஆர்.கே. லட்சுமணன் பெற்றுள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டில் ஆர்.கே. லட்சுமணனுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதில் அவரது இடதுபக்க உடல்பாகங்கள் செயல் இழந்தன.
அதில் இருந்து சிறிது மீண்டு வந்த அவர் மனைவியுடன் புனேவில் குடியேறினார். சிறுநீரக தொற்று காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானார்.
முதுபெரும் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் மறைந்தாலும் அவர் நம்மிடையே பொக்கிஷமாக விட்டுச் சென்றிருப்பது அவரது படைப்பான 'திருவாளர் பொதுஜனத்தை'...