குயிலி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு
நாகை: நடிகை குயிலி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு விசாரணை மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் கோபால். இவருக்கு ஆதரவாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி, திருத்துறைப்பூண்டியில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நடிகை குயிலி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகில் மட்டும் அனுமதி பெற்று விட்டு, நகர் முழுவதும் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இது தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் உதவி அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில், நடிகை குயிலி மற்றும் வீடு கட்டும் சங்கத் தலைவர் அன்பரசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி குயிலிக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையை வரும் மே 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.