ஆர்.கே.நகர் மக்களை கேவலப்படுத்தியதாக கமல்ஹாசன் மீது கோவை கோர்ட்டில் வழக்கு!
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக இளங்கோவன் என்பவர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கோவை: தினகரனின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்திருந்த கமல், ஆர்கேநகர் மக்களும் பணநாயகத்திற்கு துணைப்போவதாக வேதனை தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசன் மீது கோவையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகருக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அரசியல் குறித்து கருத்து சமீபகாலமாக தெரிவிக்காத கமல்ஹாசன், சில நாட்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து இருந்தார்.
இதற்கு டி.டி.வி. தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் ஆர்.கே. நகர் தொகுதி மக்களை விமர்சனம் செய்தது குறித்து கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோவையைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் இளங்கோவன் கோவை ஜே.எம். எண்-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
அதில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. (அம்மா) கட்சியீன் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மக்களிடம் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு உள்ளது.
ஆனால் நடிகர் கமல்ஹாசன் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கும் உண்டா என எனது கட்சிக்காரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்து உள்ளார். இது எனக்கு மனஉளைச்சலாக உள்ளது, எனவே கமல்ஹாசன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500, 501-ன்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு வருகிற 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.