இதிகாசத்தை இழிவுபடுத்தினாரா கமல்.. கோர்ட்டில் வழக்கு
இதிகாசத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி திரைப்பட நடிகர் கமலஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
திருநெல்வேலி: இதிகாசத்தை இழிவுப்படுத்தி பேசியதாக கோர்ட்டில் கமல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அவர் அதிர்ச்சியில் உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாதசுந்தரம். இவர் வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். அங்குள்ள நாறும்பூதநாதர் சுவாமி கோயில் பக்தர்கள் சங்க செயலாளராகவும் உள்ளார்.
இவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் நடிகர் கமல் கடந்த 12ம் தேதி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான நிலை அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு மகாபாரதத்தில் பெண்களை வைத்து சூதாடுவதை படிச்சிக்கிட்டு இருக்கின்ற ஊர் இது. அதனால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று தெரிவித்தார்.
கமலின் இந்த கருத்து மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. தன்னை கடவுள் மறுப்பு கொள்கையுடையவராக காட்டி கொள்ளும் கமல் இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி செந்தில்குமார் இது பற்றி பழவூர் போலீசார் உரிய விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த மனுவால் கமல் வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.