ரோட்டை மறித்து.. மக்களை அவதிக்குள்ளாக்கி.. கட்டடம் கட்டும் நடிகர்கள்.. ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: சென்னை தி .நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை மறித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடிகர் சங்கம் கட்டடம் கட்டி வருவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தி. நகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் உள்ளிட்டோர் தொடர்ந்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது சாலையை நடிகர் சங்கத்தினர் மறித்துள்ளனர்.
இதன் காரணமாக, பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் குடியிருப்பவர்கள், பிரகாசம் சாலைக்கு வருவதற்கு வேறு பாதைகளை பயன்படுத்தி சுற்றி வரவேண்டியதுள்ளது. விதிமுறைகளை மீறி, சாலைகளை மறித்து கட்டிடம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் ஏற்று விளக்கம் அளிக்குமாறு கூறி நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.