மண்டைய உடைச்சிட்டு கேஸ் போடுவாங்க.. போயஸ்கார்டனில் அடிவாங்கிய செய்தியாளர் மீது வழக்குப் பதிவு
போயஸ் கார்டனில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் சஞ்சீவி நேற்று தாக்கப்பட்டார். மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ள அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று சென்றார். அப்போது அவருடன் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கடுமையாக தாக்கப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். இதன் பிறகு அந்த வீட்டில் யாரும் வசிக்காமல் இருந்தனர்.
செய்தியாளர்களுடன் தீபா
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்திற்கு நேற்று சென்றார். அப்போது தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் சஞ்சீவி மற்றும் ஒளிப்பதிவாளர் ராகவன் ஆகியோரையும் தீபா அழைத்துச் சென்றார்.
மண்டை உடைப்பு
போயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைந்த உடன் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை அங்கிருந்த கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியது. இதில் செய்தியாளரின் மண்டை உடைந்தது ரத்தம் கொட்டியது.
செய்தியாளர் மீது வழக்கு
இந்நிலையில் அடிவாங்கி படுகாயம் அடைந்த செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் மீது குற்றச்சாட்டு
தீபாவுடன் சென்ற செய்தியாளரின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ள நிலையில் அவர் மீதே வழக்கு தொடர்ந்திருப்பது செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாருக்கு போயஸ்கார்டனில் என்ன நடந்தது என்று தெரிந்த நிலையிலும் ஒருதலைபட்சமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.