பதவி ஏற்க சசிகலாவை அழைக்கக் கூடாது.. ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு
முதல்வராக பதவி ஏற்க சசிகலாவை அழைக்கக் கூடாது என்று ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவி ஏற்கக் கூடாது என்று எதிர்ப்பு குரல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.
முதல்வர் பதவி ஏற்க சசிகலாவை அழைக்கக் கூடாது என ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மிரட்டல் காரணமாகவே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். எனவே, சட்டப்படி அந்த ராஜினாமா செல்லாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க அழைக்கக் கூடாது என்றும் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் கோரியுள்ளார்.
சாதாரணமாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுவிடலாம் என்று கனவு கண்டிருந்த சசிகலாவிற்கு ஓபிஎஸ்ஸின் பகிர் புகாருக்கு பின்னர் அடி மேல் அடி விழுந்து வருகிறது.