டெங்குவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு... ஹைகோர்ட் கிளையில் வழக்கு!
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஹைகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை: டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் உயிரிந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஹைகோர்ட் கிளையில் டெங்கு காய்ச்சல் மரணங்களுக்கு அரசு இழப்பீடு தர உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேராவது உயிரிழந்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், டெங்கு மற்றும் பிற ரைவஸ் காய்ச்சலால் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து செயல்பட வேண்டிய ஆய்வகங்கள் முறையே செயல்படவில்லை.
நிலைமை இப்படி இருக்க மதுரையில் 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பூச்சியியல் ஆய்வகத்தைக் கூட மாற்ற சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. பூச்சியியல் ஆய்வகத்தை புதுச்சேரிக்கு மாற்றும் அரசின் முடிவை கைவிட நீதிமன்றம் உத்தரவிடக் கோரியும் ரமேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.