கரூர்: அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய இந்து முன்னணி கட்சியினர் 3 பேர் மீது வழக்கு
கரூரில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இந்து முன்னணி கட்சியினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்: அரசு பேருந்து நடத்துனரை தாக்கி, அவரது கையில் இருந்த பண பையையும் பறித்து கொண்டு பணி செய்யவிடாமல் தடுத்த 3-இந்து முன்னணி கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னனியினர் 3 பேர் கரூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செல்லும் அரசு பேருந்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, நடத்துனரிடம், கரூர் மாவட்டம் சின்னதாரபுரம் அருகே உள்ள சூடாமணியில் இறங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு நடத்துனர், எங்கள் பேருந்துக்கு அங்கே நிறுத்தம் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் அம்மூவரும் சின்னதாராபுரத்திற்கு டிக்கெட் எடுத்து கொண்டு பயணித்து, சின்னதாராபுரம் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன், அவரை தாக்கிய பண பையையும் பறித்து கொண்டு அவரது பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமுற்ற நடத்துனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி கட்சியை சேர்ந்த மூவர் மீது தற்போது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.