ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் மீது கொலைமிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வளர்மதி என்பவர் அளித்த புகாரி்ன் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் அறக்கட்டளையைச் சேர்ந்த மேலாளர் நாராயணன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் அறக்கட்டளையி்ல் டெலிபோன் ஆபரேட்டராக பணி புரிந்தவர் வளர்மதி.
இவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் காமராஜர் அரங்கத்துக்கு சொந்தமான வணிக வளாகங்களின் வாடகை வசூலில் இளங்கோவன் மோசடி செய்துள்ளதாகவும், இது குறித்து புகார் கொடுத்ததால் கொலை செய்து விடுவேன் என்று இளங்கோவன் மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, போலீசார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் அவர் எந்நேரமும் கைதாகலாம் என்பதால், இதனைத் தடுக்க
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கவும் அவர் கோரியிருந்தார். இவரது முன்ஜாமீன் மனுவை அவசர மனுவாக விசாரித்த நீதிபதி வைத்யநாதன்இ தொடர்ந்து விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
ஆனால் இளங்கோவனை அதுவரை கைது செய்யாமல் இருக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார். இதனால் இளங்கோவன் எந்நேரமும் கைதாகலாம் என்ற சூழலில் திடீரென்று டெல்லி சென்று விட்டார்.