எஸ்.வி சேகரைத் தொடர்ந்து எச்.ராஜா மீதும் நீதிமன்றத்தில் புகார்.. கைது செய்ய வலுக்கும் கோரிக்கை
எஸ்.வி சேகரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி எச்.ராஜா மீதும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ள நிலையில், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கன்னத்தில் தட்டியதற்கு தமிழக எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து இழிவான கருத்துகளைப் பகிர்ந்ததற்கு, பத்திரிகையாளர்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இதுதொடர்பாக எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கனிமொழி எம்.பி குறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா பகிர்ந்துள்ள கருத்தும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பெண்களைப் பற்றி இழிவான கருத்துகளைப் பரப்பிவரும் எச்.ராஜா மீது கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில், 55 வழக்கறிஞர்கள் இணைந்து புகார் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
எச்.ராஜா, எஸ்.வி சேகரை கைது செய்யக்கோரி போராட்டங்கள் வலுத்து வருவதால், அவர்கள் கைது செய்யப்படலாம் என்கிற தகவல் பரவிய நிலையில், போலீஸார் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எஸ்.வி சேகர் முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.