தாசில்தார் தலையில் பணத்தைக் கொட்டிய பாமக வேட்பாளர் மீது 6 பிரிவுகளில் வழக்கு!
விழுப்புரம்: தாசில்தார் தலையில் பணத்தைக் கொட்டிய விவகாரம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை பாமக வேட்பாளர் பாலு உட்பட 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக பாமக வேட்பாளர் பாலு தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் புகார் அளித்திருந்தார்.
அவரது புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலு 20க்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்களுடன் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு நேற்று சென்றார். அங்கு முகுந்தன் இல்லாததால் தாசில்தார் ராஜேந்திரனை சந்தித்த பாலு இது தொடர்பாக புகார் தெரிவித்தார்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், தனது கைகளில் இருந்த பணத்தை தாசில்தாரின் தலையில் கொட்டினார் பாலு. மேலும் சில நோட்டுகளையும் அவர் மீது வீசினார்.
அவர் கொட்டிய ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் பெண் வாக்காளர்களுக்கு அதிமுக, திமுக வழங்கிய பணம் எனத் தெரிவித்த பாலு, பணப் பட்டுவாடாவை நிறுத்தாவிட்டால் பெண் வாக்காளர்களை ஒன்று திரட்டி போராடப் போவதாகவும், உளுந்தூர்பேட்டையில் தேர்தலை நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்றும் கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாலு உட்பட 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலு மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் தேமுதிக சார்பில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.