போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த பஸ் டிரைவர்: இன்ஸ்பெக்டர் உட்பட ஐவர் மீது வழக்கு
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே சத்திரக்குடி போலீஸ் ஸ்டேஷன் முன் அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மீது பரமக்குடி டி.எஸ்.பி., பொன்னரசு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காமன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். கல்லூரி மாணவரான இவரை, மென்னந்தி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பாலமுருகன், முருகானந்தம், பார்த்தசாரதி உள்பட சிலர் சேர்ந்து தாக்கியதாக சத்திரக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மென்னந்தி கிராமத்திற்கு விசாரணைக்கு சென்றனர்.
அப்போது பார்த்தசாரதியின் உறவினரான அரசு பஸ் டிரைவர் கோபாலை தாக்கிய போலீசார், விசாரணைக்காக வேனில் ஏற்றினர். ஆனால் அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கோபாலை இறக்கி விட வேண்டும் என கூறி போலீஸ் வேனை சுற்றி வளைத்தனர். இல்லாவிட்டால் தங்களையும் வேனில் ஏற்றி செல்லுங்கள் என கூறி கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் கோபாலை அங்கேயே இறக்கி விட்டு சென்றனர்.
அதன் பின்னர் சத்திரக்குடி போலீஸ் நிலையம் சென்ற கோபால், போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி போலீஸ் நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் தீக்குளித்தார். இதனை கண்ட போலீசார் ஓடிவந்து தீயை அணைத்து கோபாலை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கோபாலை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் மீது அவரது அண்ணனும், போகலூர் வட்டார த.மா.கா. தலைவருமான ஜெயராஜ் புகார் செய்தார். இதன்பேரில் சத்திரக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, போலீஸ்காரர்கள் ராஜீவ்காந்தி, சதீஷ், ராஜேஷ், கண்ணன், கிருஷ்ணவேலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி பொன்னரசு விசாரணை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கோபாலிடம் ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி வாக்குமூலம் பெற்றார்.