நீட் தேர்வு வழக்குகள் அனைத்தும் மாற்றம்... சென்னை ஹைகோர்ட்டில் இனி விசாரணை
நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை : நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக மதுரை நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததால் நீட் தேர்வு முடிவு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திருச்சியை சேர்ந்த மாணவி மலர்க்கொடி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த
சேர்ந்த மாணவி ஜெரோபா ஆங்கில மொழி வினாத்தாள் தவிர குஜராத்தி, இந்தி, மராத்தியில் மொழியில் வினாத்தாள் எளிமையாக இருந்தததாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது குறித்து விளக்கமளிக்குமாறு சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முன் தினம் சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், நீட் தேர்வு முடிவை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் கேட்கப்பட்ட கேள்வித் தாள் மட்டுமே கடினமாக இருந்ததாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறியது.
நீட் தேர்வை தமிழக அரசு எப்போதும் எதிர்ப்பதாக அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஜூன் 12ம் தேதி அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வர இருந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் தெரிவித்துள்ளார்.