கனிஷ்க் பூபேஷ்குமார் மீது அமலாக்கத்துறை, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு!
கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை : சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னையில் 14 வங்கிகளில் போலி ஆவணங்களை கொடுத்து ரூ. 824 கோடி மோசடி செய்ததாக கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயினை சிபிஐ தனது விசாரணை வளையத்திற்குள் வைத்துள்ளது. பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவருடைய மனைவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் பூபேஷ் மீது சென்னை போலீஸ் மற்றும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான பூந்தமல்லியில் உள்ள சுமார் 10 ஏக்கர் நிலத்தை வாங்குவதாக ஒப்பந்தம் போட்டு, அந்த ஆவணங்களை வைத்து வங்கியில் ரூ. 42 கோடி பெற்றுள்ளார் பூபேஷ்குமார் ஜெயின். இந்த நிலத்தின் மீது கடன் வாங்கியது குறித்து உரிமையாளர் புகழேந்திக்கு அண்மையில் தெரிய வந்ததையடுத்து அவர் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பூபேஷ்குமார் ஜெயின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பூபேஷ்குமார் ஜெயின் மீது அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிபிஐ தொடர்ந்த வங்கி மோசடி வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது.