ஏடிஎம்களில் வராத 2000 ரூபாய் நோட்டுகள்.. கடுமையான தட்டுப்பாடு ஏன்?.. திரும்பப் பெறப்படுகிறதா?
இந்தியா முழுக்க உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: இந்தியா முழுக்க உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்பப்பெறப்படுகிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
தற்போது இந்தியாவில் திடீர் என்று ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு தற்போது இந்தியா முழுக்க பரவி உள்ளது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படுமா என்ற பதற்றம் உருவாகி உள்ளது.
பீகார், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. 2,000 ரூபாய் நோட்டுகள் எங்கும் கிடைப்பதில்லை என்று புகார் அளிக்கப்பட்டு வருகிறது. வங்கிகளில் கூட, பணம் எடுப்பவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
இது மீண்டும் 2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுகிறதா என்ற பீதியை உருவாக்கி உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு ரூபாய் 15,00,000ஆக இருந்த பணப்புழக்கம், தற்போது ரூபாய் 16,50,000ஆக அதிகரித்து இருக்கிறது. ஆனால் பணப்புழக்கம் அதிகரித்த பின்பும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் எப்படி குறைந்தது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இதனால் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறதோ என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கான மறுப்பு எதுவும் அரசு தரப்பில் இருந்தோ, ஆர்பிஐ தரப்பில் இருந்தோ தரப்படவில்லை.