ஆர். கே. நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 15 பேர் அதிரடி கைது.. ரூ.15 லட்சம் பறிமுதல்
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 15 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதனால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து வருகின்றன.
இதனால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையால் 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா புகார்
இதுகுறித்து கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக இதுவரை மொத்தம் 19 புகார் வந்துள்ளது என்றும் அதில் 8 புகார்கள் மீது போலீசார் எப் ஐ ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
பணம் பறிமுதல்
இந்த புகார்களின் அடைப்படையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. முழு தகவல்கள் கிடைத்த உடன் அதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கார்த்திகேயன் தெரிவித்ததுள்ளார்.
இலவச பெட்ரோல்
இதுதவிர ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுகுறித்து தேர்தல் அலுவலர் விசாரணை செய்து வருவதாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
சிசிடிவி கேமரா
ஆர். கே. நகர் தொகுதி முழுவதும் வீடியோ கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறிய தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.