அடேங்கப்பா! ஓடும் பஸ்ஸில் கண்டகர் மூலம் பணப்பட்டுவாடா.. அசரவைக்கும் ஆர்கே நகர்!
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகர் தொகுதிக்குட்ட தண்டையார்பேட்டையில் ஓடும் பஸ்சில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பேருந்தை பறிமுதல் செய்து நடத்துனரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல். தண்ணீர் போல பணத்தை வாரி அரசியல் கட்சிகள் இறைத்து வருகின்றன.
ஜெயலலிதா போட்டியிட்டதால் நட்சத்திர தொகுதியான ஆர்.கே. நகர், தற்போது பணப்பட்டுவாடா புகாரின் பேரின் மேலும் ஜொலித்து வருகிறது.
இந்தப் புகாரில் அதிகம் சிக்கி வருவது அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன்தான். அவரது ஆதரவாளர்கள்தான் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓடும் பஸ்சில் பணப்பட்டுவாடா
இந்நிலையில், நேற்று இரவு தண்டையார் பேட்டைக்கு சென்று வரும் பேருந்தில் பணப்பட்டுவாடா செய்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 44சி என்ற வழித்தடம் கொண்ட பேருந்தின் நடத்துனர்தான் இந்த வேலையை செய்துள்ளார். இதனை அறிந்த திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
2 லட்சம் ரூபாய்
இந்த புகாரின் அடிப்படையில் நடத்துனர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 லட்சம் அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பேருந்தும் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதுதொடர்பாக, நடத்துனர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறக்கும் படை
இதேபோன்று ஆர். கே. நகர் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. பணப்பட்டுவாடா குறித்து திமுக உள்ளிட்ட பிற கட்சியினர் புகார் அளித்தாலும் பயன் ஏதும் இல்லை என்கின்றனர் தொகுதிவாசிகள்.