ஆர்.கே. நகருக்கு வெளியே ஓட்டுக்குப் பணம்… டூ வீலரில் போலீஸ் விடிய விடிய ரோந்து!
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் புகார் எழுந்துள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2 சக்கர வாகனங்களில் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சென்னை: ஆர்.கே. நகரில் பார்க்கும் இடமெல்லாம் பணம்தான். அந்த அளவிற்கு அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது.
வரும் 12ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் எப்படியும் வென்று தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் உள்ளார். தோற்றால் அவருக்கு மானப்பிரச்சனையாகிவிடுமாம். அதனால் பணத்தை அவர் தண்ணியாக வாக்காளர்களுக்கு கொடுத்து வருகிறார்.
நேற்று ஓடும் பேருந்தில் சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை நடத்துனர் கொடுத்ததாக புகார் எழுந்தது. போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.
தொகுதிக்கு வெளியே…
இந்நிலையில், ஆர்.கே. நகரில் தொகுதியின் சுற்றுவட்டாரங்களில் வாக்காளர்களை சந்தித்து கட்சிக்கார்கள் பணம் கொடுத்து வருகின்றனர். தொகுதிக்கு வெளியே நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்களை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்துப் பணியில் செல்கின்றனர்.
பறக்கும்படை
பணப்பட்டுவாடாவை தடுக்க ஏற்கனவே 10 பறக்கும் படைகள் உள்ளன. என்றாலும் இவை பெரிய சாலைகளில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை மட்டுமே கண்காணிக்க முடியும். ஆனால் சிறு குறு தெருக்களிலும், சந்துகளிலும் நடைபெறும் பணப்பட்டுவாடா தடுக்க முடியாத சூழல் உருவாகியது.
இரு சக்கர வாகனம்
இதனையடுத்து, 28 இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு வருவாய்த் துறை அலுவலர் ஒரு போலீஸ் என்ற அளவில் இருவர் இந்த இரு சக்கர வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடிய விடிய சோதனை
இரு சக்கர வாகன ரோந்துப் பணிகள் விடிய விடிய நடைபெற்று வந்தன. ஒரு நாளைக்கு 3 ஷிஃப்டுகளில் இந்த ரோந்து பணிகள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்றாலும், பணம் தண்ணியாய் ஓடுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. வெவ்வேறு முறைகளை கையாண்டு பணப்பட்டுவாடா செய்வது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.