ஆர்.கே. நகரில் தண்ணியாய் ஓடுகிறது கரன்சி.. கட்டுப்படுத்துங்களேன்.. தேர்தல் அதிகாரியிடம் தீபா புகார்
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீபா பேரவையினர் தேர்தல் அதிகாரியிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே. நகரில் திரும்பும் இடமெல்லாம் பணப்பட்டுவாடா நடந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பக்கம் பறக்கும் படை வந்தால் அந்தப்பக்கமாக பணத்தை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர் பலே கில்லாடிகள்.
வரும் 12ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் எப்படியும் வென்று தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் உள்ளார். இதற்கு போட்டியாக ஓபிஎஸ் அணியினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இன்று தீபா பேரவையைச் சேர்ந்தவர்கள் இன்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து தீபா சார்பில் புகார் மனு அளித்துள்ளனர். அதில் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்,
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி அதன் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். படகு சின்னத்தில் போட்டியிடும் இவர் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.