'சக்தி வாய்ந்த' மதுரை பாண்டி முனி கோவில் பணம் அபேஸ்- அதிகாரிகள் மீது பகீர் புகார்
மதுரை பாண்டி முனிசாமி கோவில் உண்டியலில் இருந்து பல லட்சம் ரூபாய் பணத்தை தினசரியும் திருடி வருகின்றனர் கோவில் ஊழியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் பலருக்கு குல தெய்வமாக திகழும் பிரபல பாண்டி முனுசாமி கோவில் இஓ செல்லத்துரை மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பக்தர்கள் காணிக்கையாக போடும் உண்டியல் பணத்தை ஊழியர்களே கை வைத்து விட்டதாக வீடியோ ஆதாரத்துடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர் கோவில் நிர்வாகிகள்.
மதுரையில் பாண்டி முனுசாமி என்றால் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பொங்கல் வைத்து ஆடு வெட்டுவது மட்டுமின்றி சுருட்டு, மது என அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப படையல் வைப்பார்கள்.
300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சாமியோட அருளைப் பெற சடங்குகள் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. விரும்பிய வழியில் கடவுளின் அன்பைப் பெறலாம்' என்கிற உயர்ந்த தத்துவத்திற்கு உதாரணமாக இருக்கிறது பாண்டி கோவிலின் பக்தி மார்க்கம்.
பாண்டி முனீஸ்வரர்
மதுரை வடக்குப் பகுதியில் இருக்கும் மேலமடை பகுதியில் இருக் கிறது பாண்டி முனீஸ்வரர் கோவில். பாண்டியைப் பற்றி மதுரை மாவட்ட மக்களிடையே பல செவிவழிக் கதைகள் உண்டு. அதில் சிறுவர்களை மிரள வைக்கும் பிரசித்தி பெற்ற கதையும் பேசப்படுகிறது.
ஆக்ரோஷ தெய்வம்
வீட்டுக்கே அடங்காத பிள்ளையாய் வளர்ந்த பாண்டி, அநீதியைக் கண்டால் ஆக்ரோஷத்தோடு பாய்வார். இப்படி வாழ்ந்த பாண்டி இறந்தபின் ஒரு குடும்பத்தின் குலதெய்வமாகி, இன்று தென்மாவட்ட மக்களின் இஷ்ட தெய்வமாகி இருக்கிறார்.
இரும்பு சங்கிலி
இப்போதும்கூட பாண்டி சிலையை குழந்தை கள் பார்த்தால் பயந்து போகும். முழிகளை உருட்டி, முறுக்கிய மீசையோடு சினந்து காணப்படும் பாண்டி முனி... எப்போது வேண்டு மானாலும் ஆக்ரோஷத் தோடு கிளம்பிவிடும் என்பதால், சிலையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கிறார்கள்' எனச் சொல்வார்கள்.
துடியான தெய்வம்
பாண்டி முனிசாமியை நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்வார்கள். வெள்ளி, ஞாயிறு நாட்களில் கூட்டம் அலைமோதும் காணிக்கை லட்சக்கணக்கை எட்டும். ஆடு, கோழி என நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பணம் திருட்டு
பலரும் அஞ்சும் பாண்டி முனிசாமி காணிக்கை பணத்தை கை வைத்துள்ளனர் கோவில் ஊழியர்கள். இதை கையும் களவுமாக பிடித்து வீடியோ பதிவு செய்து வைத்துள்ளனர் உள்ளூர்வாசிகள். ஊழியர் செந்தில்குமார்தான் இப்படி பணத்தை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகார் கொடுத்தும் பலனில்லை
இஒ செல்லத்துறை உத்தரவுப்படி ஊழியர்கள் முத்துக்குமார், செந்தில்குமார் ஆகியோர்தான் பணம் திருடுவதாக ஆதாரத்துடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை என்கின்றனர்.
நடவடிக்கை தேவை
பாண்டி முனுசாமி பணத்தை திருடியது மட்டுமல்லாது கோவிலுக்கு காணிக்கையாக வந்த ஆடு, கோழி ஆகியவைகளையும் ஏலம் விடாமல் தனியாக விற்று விட்டனர் என்றும் புகார் கூறியுள்ளனர். எனவே செயல் அலுவலர் செல்லத்துரை மீதும் அவரது திருட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.