ஃபேஸ்புக், ட்விட்டரில் அசிங்கப்படுத்துகின்றனர்... பாதுகாப்பு தேவை - கவுசல்யா சங்கர்
உயிருள்ளவரை சாதியை ஒழிக்க போராடுவேன் என்று உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா கூறியுள்ளார்.
Recommended Video
திருப்பூர்: சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அசிங்கப்படுத்துவதாக உடுமலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா கூறியுள்ளார்.
உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது வரவேற்கத்தக்கது என்று கவுசல்யா தெரிவித்துள்ளார். இதனையடுத்து கவுசல்யாவின் புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வலம் வந்தன. சமூக வலைத்தளங்களிலும் கவுசல்யாவைப் பற்றிய அவதூறாக பதிவிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கவுசல்யா, ஆணவக் கொலை வழக்கில் 3 பேர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் மனநோயாளிகள் போல செயல்படுகின்றனர். சங்கரின் தம்பிகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அசிங்கமாக எழுதுகின்றனர். சைபர் கிரைமில் புகார் செய்துள்ளேன்.
என்னையும் கொன்று விடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. எனக்கு பாதுகாப்பு அளிக்க காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். எனது உயிருடன் உள்ளவரை சாதியை ஒழிக்க போராடுவேன் என்று தெரிவித்தார். பள்ளிகளிலேயே ஜாதிகள் குறிப்பிடப்படுகிறதே என்று கேட்டதற்கு, ரிசர்வேசன் பற்றி பேச வேண்டாம் என்று கூறினார்.
தந்தை குற்றவாளி என்றால் தாயும் குற்றவாளி தான் என்று மேற்முறையீடு செய்ய உள்ளதாகவும், தண்டிக்கப்பட்ட குற்றவாளியை என் தந்தை என்று குறிப்பிடாதீர்கள் என்று கவுசல்யா கேட்டுக்கொண்டார்.