சென்னை துறைமுகம் வந்த கப்பல்.. அதுவும் சீனாவிலிருந்து.. உள்ளே பார்த்தால்.. ஆடிப்போன அதிகாரிகள்!
Recommended Video
சென்னை: சீனாவிலிருந்து சென்னைக்கு வந்த கப்பலில், அழையாத விருந்தாளியாக, ஒருவர் உட்கார்ந்திருந்தார்.. இதைப் பார்த்த மொத்த அதிகாரிகளும் ஆடிப்போய்விட்டனர். ஒருவழியாக இப்போதுதான் துறைமுகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாம்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோரை அந்த வைரஸ் பலிவாங்கிவிட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அனைத்து நாடுகளுமே உஷாராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உஷார் நிலை
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் தனிவார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது.
பூனை
கப்பல் போக்குவரத்திலும் கெடுபிடிகள் உள்ளன. சீனாவில் இருப்பவர்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. இப்படியாக தீவிர சோதனைகள் நடத்தப்படும் நிலையில்தான், அழையாத விருந்தாளியாக ஒரு பூனை சீனாவிலிருந்து கப்பலின் கண்டெய்னர் வழியாக சென்னை வந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த அந்த கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்ததும் அதில் இருந்த கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தபோதுதான் இது தெரியவந்தது.
பீதி
பொம்மைகள் நிரப்பப்பட்டிருந்த ஒரு கண்டெய்னருக்குள், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று உயிருடன் இருப்பதை பார்த்த அதிகாரிகள், அப்படியே ஷாக்காகிவிட்டனர். பூனை வழியாக கொரோனா வைரஸ் பரவிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அங்கிருந்தோரிடம் தொற்றிக் கொண்டது. இதையடுத்து, உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீவிர சோதனை
சுகாதாரத்துறை அதிகாரிகள், மாஸ்க் அணிந்தபடி, விரைந்து வந்தனர். அந்த பூனைக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். நல்லவேளையாக, பூனைக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான முதல்கட்ட அறிகுறி எதுவும் இல்லை. அதேநேரம், பூனையை யார் அனுப்பினார்கள், ஏன் அனுப்பினார்கள் என்பது தெரியாததால், சந்தேகம் நீடிக்கிறது. எனவே, பூனையை வெளியில் எங்கும் விடாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.