தமிழக அரசின் ஜாபர்சேட் சஸ்பெண்ட் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது மத்திய நிர்வாக தீர்ப்பாயம்!!
சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அதிரடியாக இன்று ரத்து செய்துள்ளது.
2006- 2011-ல் திமுக ஆட்சிக்காலத்தில் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். முதல்வராக பதவி வகித்த கருணாநிதியிடம் தனி செல்வாக்குடன் திகழ்ந்தவர்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாபர்சேட், மண்டபம் முகாமுக்கு கூடுதல் டிஜிபியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக ஜாபர்சேட் வீடு பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜாபர்சேட், அவரது நண்பர்கள், மாமனார் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
பின்னர் ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த சஸ்பெண்ட் உத்தரவு 6 மாதத்துக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு ஜாபர்சேட் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருந்தார்.
இதனை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்த தமிழக அரசின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தும் அவருக்கு மீண்டும் பணிவழங்கவும் உத்தரவிட்டது.