பகீர்...மக்களை வைத்தே காவிரி ஆற்றை சூறையாடும் மணல் 'மாஃபியாக்கள்'
காவிரி ஆற்றை கரையோர கிராம மக்களை வைத்தே கொள்ளையடிக்கின்றனர் மணல் மாஃபியாக்கள்.
Recommended Video
மோகனூர்: காவிரி ஆற்றில் மணல் கொள்ளையடிப்பதற்காக கிராம மக்களையே ஒட்டுமொத்தமாக மாஃபியாக்கள் களமிறக்கியிருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காவிரி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஆனால் மணல் மாஃபியாக்கள் நூதனமான முறையில் மணல் கொள்ளையை தொடருகின்றனர்.
மோகனூர் முதல் கொத்தமங்கலம் வரை காவிரி ஆற்றின் கிராம மக்களையே இப்போது மாஃபியாக்கள் மணல் கொள்ளையில் இறக்கிவிட்டுள்ளனர்.
மலைக்க வைக்கும் கூலி
மாலை முதல் இரவு வரை 4 மணிநேரம் வேலை.. 30 அல்லது 40 மூட்டை மணல் அள்ளி கொடுக்க வேண்டும்.. 4 மணிநேர மணல் சுரண்டலுக்கு ஒருநபருக்கு ரூ2,000 ஒரு குடும்பமே மணல் அள்ள போனால் ஒரு நாளைக்கு ரூ5000 முதல் ரூ6000 வரை கிடைக்கிறது
அள்ளித் தரும் மாஃபியாக்கள்
மணல் அள்ளிக் கொண்டு வருவதற்காக பிரத்யேக இருசக்கர வாகனங்களை மாஃபியாக்களே வாங்கியும் கொடுக்கின்றனர். இப்படித்தான் கிராம மக்களை மணல் கொள்ளையில் இறக்கிவிட்டிருக்கிறது மாஃபியா கும்பல். அத்துடன் காவிரி கரை கிராமங்களில் கோவில்களை புதுப்பித்து, கட்டித் தருவதையும் மாஃபியாக்கள் வழக்கமான நடைமுறையாக வைத்துள்ளனர்.
ரூ50 லட்சம் முதல் ரூ1 கோடி வரை
ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ50 லட்சம் முதல் ரூ1 கோடி வரை கொடுக்கிறது இந்த மாஃபியா கும்பல். 'நம்ம ஊரிலும் மண் அள்ள போறாங்கப்பா... இனி செலவுக்கும் பிரச்சனை இல்லை.. ஊர் கோவிலையும் கட்டிக் கொடுத்துவிடுவாங்க.. ரோடும் போட்டு தந்துடுவாங்க.' என வெள்ளந்திகளாக காவிரி கரை கிராம மக்கள் குதூகலிக்கின்றனராம்.
சூனியமாக்கும் மாஃஃபியாக்கள்
மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தங்களது எதிர்காலத்தை மாஃபியாக்கள் சூனியமாக்குவதை உணராதவர்களாக இந்த மக்களும் கை கோர்த்திருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசு நிர்வாகத்தில் சேர வேண்டியவர்களுக்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து, கிராம மக்களை பணத்தாலும் ஜாதியின் பெயராலும் கட்டிப் போட்டு கனகச்சிதமாக கொடிகட்டிப் பறக்கிறது மணல் மாஃபியாக்களின் ராஜ்ஜியம்