தமிழகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.. தமிழன்தான் ஆள வேண்டும்.. கடலூரில் பாரதிராஜா பேச்சு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடக்கும் போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு இருக்கிறார்.
Recommended Video
கடலூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடக்கும் போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு இருக்கிறார். இதில் தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு துரோகம் செய்ததாக கூறி விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக டெல்டா பகுதி போராட்ட களமாக மாறியுள்ளது. தற்போது கடலூர் மஞ்சக்குப்பத்தில் காவிரிக்காக போராட்டம் செய்து வருகிறார்கள். விவசாயிகளுடன் மாணவர்கள், மற்ற விவசாய சங்கங்கள் கலந்து கொண்டு உள்ளது. இதில் பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
காவிரிக்காக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவர் சென்னையில் இருந்து இன்று காலை கடலூர் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்த போராட்டத்தில் பேசிய அவர் ''தமிழகத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன. மணல் கொள்ளை தொடங்கி தண்ணீர் வரை கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழகம் பாலைவனமாக்கப்படுகிறது. காவிரியில் நாம் ஏமாற்றப்படுகிறோம்'' என்றுள்ளார்.
மேலும் ''தமிழகத்துக்கு தமிழன் மட்டும் தலைவனாக முடியும். தமிழர்கள் கண்ணியமானவர்கள், அடக்கமானவர்கள், எவ்வளவு கோபமாக பேசினாலும் நாம் வன்முறையை கையால் கூடாது. நாம் வீரமாக இருந்தாலும் விவேகமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.தொழில் செய்யலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்கள் ஆனால் படுக்கையில் பங்கு கேட்காதே'' என்று குறிப்பிட்டுள்ளார்.