மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 70,000 கன அடி நீர் வரத்து.. 1 லட்சமாக உயரும் என தகவல்!
மேட்டூர்: கர்நாடகத்திலிருந்து மிகப் பெரிய அளவில் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டிருப்பதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு வர ஆரம்பித்துள்ளது. ஓகனேக்கலும் வெள்ளக் காடாகியுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 70,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகத்திலிருந்து தொடர்ந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் இந்த அளவானது இன்று இரவுக்குள் விநாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேட்டூர் அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 50,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்தால் திறந்து விடப்படும் நீரின் அளவும் உயரக் கூடும்.