காவிரி ஆற்றில் சாய ஆலை கழிவு நீர்.. உடனடி நடவடிக்கை தேவை.. ஈஸ்வரன் கோரிக்கை
ஈரோடு : சாய மற்றும் தோல் கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்து அனைத்துதரப்பு மக்களையும் முட்டாளாக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் நொச்சுக்காட்டு வலசு, சுண்ணாம்பு ஓடை, அக்ரஹாரம் (பிச்சக்காரன் பள்ளம்), மற்றும் பெரும்பள்ளம் போன்ற ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட இன்னும் பல பகுதிகளில் கால்வாய் வழியாக சாய மற்றும் தோல் கழிவுகள் காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் தொடர்ந்து சாய மற்றும் தோல் கழிவுகள் அதிக அளவில் கலக்கப்பட்டு வருவதால் ஆற்று நீர் மாசுபட்டு எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மட்டுமல்லாமல், ஓடும் இடமெல்லாம் நிலத்தடிநீரும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறி இருக்கிறது.
இதனால் அதிகளவில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு கூடிய விரைவில் டெல்டா மாவட்டம் வரை எதிரொலிக்கும். உண்மைநிலை இவ்வாறு இருக்கையில் சாய கழிவுகளே காவிரி ஆற்றில் கலக்கப்படுவதில்லை என்று கூறி சாமானிய மக்களின் உயிரோடு விளையாடுவது யாரை காப்பாற்றுவதற்காக என்று ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
இன்னும் சில சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் நூதன முறையில் கழிவுகளை எந்தவொரு சுத்திகரிப்பு செய்யாமல் கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் அப்படியே விடுவதால் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடிநீர் மிகவும் பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீர் என எதற்குமே பயன்படுத்த முடியவில்லை.
நீர் இருந்தும் அருந்த முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். தமிழக அரசுக்கும், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கும் காவிரி ஆற்றில் சாய மற்றும் தோல் கழிவுகள் கலக்கப்படுவது தெரியவில்லை என்றால் நானும், அப்பகுதி விவசாயிகளும் நேரடியாக கூட்டி சென்று காட்டுகிறோம். எங்களுடன் அதிகாரிகள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு வரத் தயாரா என்று ஈஸ்வரன் அந்த அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.