ஐபிஎல் போட்டியை நடத்துவோம்... அடம்பிடிக்கும் ராஜீவ் சுக்லாவுக்கு கொங்கு ஈஸ்வரன் கடும் கண்டனம்
தமிழனுக்கு ஐபிஎல் போட்டிகளை விட காவிரி முக்கியம் என்று கொமதேகவின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஐபிஎல் போட்டியை அரசியல் ஆக்காதீர்கள் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருப்பதற்கு கொங்குநாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு இன்று பதிலளித்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐபிஎல் போட்டிகளை விளையாட்டாக பாருங்கள். இதை அரசியல் ஆக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொங்குநாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தலைவர் பேச்சு
அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழகமும் போராடி கொண்டிருக்கும் இந்த சூழலில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த கூடாது என்று அனைத்துதரப்பினரும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்தால் தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஐபிஎல் போட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்றாமல் சென்னையில் தான் நடத்துவோம் என்றும், விளையாட்டிலிருந்து அரசியலை ஒதுக்கி வையுங்கள் என்றும் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கொச்சைப்படுத்தக் கூடாது
தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்காக போராடும் போராட்டம் திசை மாறிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் மற்ற துறை சார்ந்தவர்களும் ஐபிஎல் போட்டியை சேப்பாக்கத்தில் நடத்த கூடாது என்று சொல்வதை அரசியல் நோக்கில் பார்ப்பது தவறு.ஒரு சிலரின் ஆதாயத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து பொழுதுபோக்கிற்காக நடக்கும் விளையாட்டு ஐபிஎல் கிரிக்கெட். இப்படி வெறும் கொண்டாட்டத்திற்காக நடத்தப்படும் விளையாட்டை உரிமைக்காக போராடும் போராட்ட களத்தில் நடத்த வேண்டாம் என்று கூறினால் அதை அரசியல் என்று போராட்டத்தை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.
ஐபிஎல்.,விட காவிரி முக்கியம்
சென்னையில் ஐபிஎல் போட்டியே நடத்தக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. தற்போதைக்கு வேண்டாம் என்றுதான் வலியுறுத்துகிறோம். தமிழர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை விட தண்ணீர் முக்கியம். காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக போராடி அதற்கான தீர்வை உச்சநீதிமன்றம் வழங்கியும் அதை நடைமுறைப்படுத்தாமல் மத்திய அரசு ஏமாற்றுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்று தமிழகம் போராடி வருகிறது.
வேறு இடத்தில் ஐபிஎல்
தண்ணீர் இல்லாமல் இனி ஒரு விவசாயி தமிழகத்தில் இறக்க கூடாது என்ற போராட்டத்தின் உணர்வுகளை மற்றவர்கள் புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா அவர்கள் கூறிய கருத்திற்கு உடனடியாக தமிழக மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும். எனவே தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.