காவிரி விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல - எடப்பாடி பழனிச்சாமி
காவிரி பிரச்சினையை சட்டரீதியாகதான் அணுக வேண்டும் என்றும் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
Recommended Video
கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். காவிரி பிரச்சினையை சட்ட ரீதியாக அணுக வேண்டுமே தவிர சமூகவலைத்தளங்களில் தீர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி குறித்து, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ் கூறியது, உண்மைக்கு புறம்பானது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
யாரையோ தப்பிக்க வைக்கவே, ராமமோகன ராவ் அவ்வாறு கூறுகிறார் என்றும், முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 2011ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூட நடவடிக்கை மேற்கொண்டதே அதிமுக அரசுதான் என்றும், ஆலை நிர்வாகத்திடம் பணம் வாங்கியிருந்தால் எப்படி மூடியிருக்க முடியும்.
காவிரி விவகாரம் சமூக வலைதளங்களில் தீர்க்ககூடிய பிரச்சனை அல்ல, சட்டரீதியாகதான் அணுக வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளோம். மேலும் மே 3ம் தேதிக்குள் காவிரி திட்டம் குறித்த வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா தேர்தலில் டிடிவி தினகரன் அணியினர் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த இருக்கின்றனர் என்பது கற்பனை முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கடந்த ஏப்ரல் 7ம் தேதி ஆஜரானார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா படுக்கையில் இருந்தவாறு 2016 செப்டம்பர் 27ம் தேதி மருத்துவமனையில் 2 மணி நேரம் எங்களிடம் ஆலோசனை நடத்தினார்.
செப்டம்பர் 28ம் தேதி ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்று தெரிவித்திருந்தார். இதைத்தான் உண்மைக்கு மாறாக ராம் மோகன்ராவ் பேசியுள்ளதாக கூறியுள்ளார் முதல்வர்.