தமிழகத்துக்குரிய காவிரி நீர் பங்கீட்டை கர்நாடக வழங்க வேண்டும்: வைகோ
மதுரை: காவிரி நீரை தருமாறு தமிழக விவசாயிகள் பிச்சை கேட்கவில்லை. தங்களுக்குரிய பங்கீட்டைத் தான் வழங்குமாறு கேட்டு வருகிறார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறுவது பொய் என்றும் வைகோ கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கருவேல மரங்களை அழிக்க உத்தரவிட வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வைகோ மனு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகி வைகோ வாதாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி நீரின் தமிழகத்திற்குரிய பங்கை வழங்காமல் இருக்கும் கர்நாடக அரசை கண்டிக்கிறோம். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என மத்திய சட்ட அமைச்சர் கூறுவதை பிரதமர் கண்டிக்க வேண்டும். காவிரி நீரை தருமாறு தமிழக விவசாயிகள் பிச்சை கேட்கவில்லை. தங்களுக்குரிய பங்கீட்டைத் தான் வழங்குமாறு கேட்டு வருகிறார்கள்.
கர்நாடகாவில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாநில அரசு தெரிவித்து வருகிறது. அது உண்மையல்ல. கடன் தொல்லையால் தான் அம்மாநில விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தி திணிப்பை மேற்கொள்ளும் பிரதமரை கண்டிக்கிறேன் என்றும் வைகோ தெரிவித்தார்.