காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது
மத்திய அரசை கண்டித்து புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
புதுவை: தமிழகத்தை போல் புதுவையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் போராட்டத்தின் முதல் கட்டமாக இன்று புதுவை ரயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய நீதி கட்சி, இந்திய குடியரசு கட்சி, பாமக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன.
ஆனால் பிரதான எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த முழு அடைப்புக்கு தொழிலாளர், வியாபாரிகள் சங்கங்கள், மற்றும் ஐஎன்டியூசி, தொமுச, ஏஐடியூசி, ஏசிசிடியூ உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.
இதனால் புதுவையில் நாளை பஸ்கள் ஓடாது. அதேபோல, தமிழகத்திலும் நாளை பந்த் போராட்டம் நடைபெறுவதால், பேருந்துகள் புதுவைக்கு இயக்கப்படமாட்டாது.