காவிரிக்காக தொடரும் போராட்டம் - தஞ்சையில் எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு - 50 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 8வது நாளாக இன்றும் போராட்டங்கள் நீடிக்கின்றன. தஞ்சாவூரில், காவிரி உரிமை மீட்டு குழுவை சேர்ந்த விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்டவாளத்தில் அமர்ந்து திருச்சியிலிருந்து சென்னை சென்ற சோழன் விரைவு ரயிலை மறித்தனர். மற்றொரு தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் ரயில்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சிதம்பரத்தில் காரைக்கால் - பெங்களூரு ரயிலை மறித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முழக்கம் எழுப்பினர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் இந்தி பிரச்சார சபையை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். முற்றுகையை தடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கைது செய்யப்பட்டனர்.