காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
காவிரி நீர் பிரச்சினைக்கு உச்ச நீதி மன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது . மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் 1986-ல் தொடங்கி மறைந்த ஜெயலலிதா உச்சநீதிமன்ற உத்தரவை அரசிதழில் வெளியிட வைத்தது வரை 32 ஆண்டுகள் அதிமுக அரசு தொடர்ந்து காவிரி பிரச்சினைக்கு போராடி வெற்றி பெற்றுள்ளது.
காவிரி வழக்கில் தமிழக வழக்கறிஞர்கள் ஆணித்தரமான வாதத்தை முன் வைத்தனர். இதனால் நீண்ட நெடிய பிரச்னைகளுக்கு உச்சநீதிமன்றம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகள், மற்றும் பொதுமக்களுக்கு நல்ல தீர்ப்பையும் வழங்கியுள்ளது.
காவேரி மேலாண்மை வாரியம் என்பதை காவேரி மேலாண்மை ஆணையம் என அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை ஆணையம் குழுவினர் கண்காணித்து அறிக்கை அளிக்க உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பால்14.7 டிஎம்சி தண்ணீர் அளவு மட்டுமே குறையும். ஆனால் உபரியாக மழை காலங்களில் நமக்கு நீர் கிடைக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.