காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி களத்தில் இறங்கிய மாணவர்கள் - போராட்டம் தீவிரம்
காவிரி வேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுவடைந்துள்ளது.
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 6 வாரங்கள் கெடு அளித்தது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சையில் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.காவிரி வேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேடிக்கை பார்க்கும் தமிழனமே வீதியில் இறங்கி போராடு என சாலையில் அமர்ந்து மாணவர்கள் முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சையை அடுத்த வல்லம் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் கழுத்தில் சுருக்குமாட்டியபடி மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார். மாணவர்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.