மத்திய அரசின் இழுத்தடிப்புக்கு துணை போகும் உச்சநீதிமன்றம்... பி.ஆர்.பாண்டியன், அய்யாகண்ணு புகார்!
மத்திய அரசின் இழுத்தடிப்புக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை போவதாகவும் தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து பாதகமான தீர்ப்பே வழங்கப்படுவதாகவும் விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Recommended Video
சென்னை : மே 3க்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இழுத்தடிப்பு வேலை தான். மத்திய அரசு செய்யும் காலதாமதத்திற்கு உச்சநீதிமன்றம் துணை போவதாக விவசாய சங்கத்தை சேர்ந்த பி.ஆர். பாண்டியன், அய்யாகண்ணு உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து கருத்து கூறியதாவது : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பத்தகுந்ததாக இல்லை. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பற்றி உச்சநீதிமன்றம் எதையும் கூறாமல் மத்தியஅரசுக்கு மீண்டும் கால அவகாசம் என்கிற பெயரில் வார்தையை மாற்றி மே 3ம் தேதிக்குள் வரைவுத் திட்டம் என்கிறார்கள். மே 4ம் தேதி மீண்டும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டம் என்றால் என்ன, வரைவுத் திட்டம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யும்.
மறைமுக முயற்சியாக நீதிமன்றமே நீதிமன்றத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்கிவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எங்களின் அமைதி வழி போராட்டம் தொடரும். உச்சநீதிமன்ற தீர்ப்பே கலவரத்திற்கு காரணமாகிவிடக் கூடாது என்பது தான் எங்களின் பயமாக இருக்கிறது. மே 3ம் தேதி வரை அவகாசம் கொடுத்து கர்நாடக தேர்தலை பாஜக சந்திக்க வழி செய்யப்பட்டுள்ளதை பார்க்கும் போது பிரதமரின் தலையீட்டால் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளதோ என்று தோன்றுகிறது. தமிழக விவசாயிகளின் போராட்டத்தை தடை செய்ய முடியாது பிரதமர் வருகையை துக்க நாளாக அனுசரிப்போம், பிரதமர் நேரடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் தலையிடுகிறார் என்பதைத் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு உணர்த்துகிறது. திட்டமிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு துணையாக இருக்கிறது.
மே3க்குள் திட்ட வரைவு என்று தான் சொல்லி இருக்கிறது நீதிமன்றம், எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்கனவே சொன்னது போல மே 3க்குள் அமைக்க வேண்டும். இதற்கான போராட்டங்கள் தொடரும், போராட்டத்திற்கு நீதிமன்றம் தான் தள்ளுகிறது, போராட்டம் தீவிரமடையும் என்றும் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கூறியதாவது : தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த தீர்ப்பு. கர்நாடகா தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது. நீதிபதி செல்லமேஸ்வர் வேண்டியவர்களுக்கு உச்சநீதிமன்றம் சார்பாக செயல்படுவதாக சொன்னார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை.
திட்டத்தை போடச் சொன்னால் மத்திய அரசு எதுவும் செய்யாது. ஏனெனில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் எந்த பிடிப்பும் இல்லாததால் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று செயல்படுகிறது. தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அங்கு ஓட்டு வாங்க முடியாது. தமிழ்நாடு பாலைவனமானால் மத்திய அரசுக்கு மகிழ்ச்சி.
விவசாய நிலங்களில் கார்ப்பரேட்டுகளை கொண்டு வந்து தமிழகம் மூலம் லாபம் பார்க்க வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டம். மே 3க்குள் காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது, வரைவு செயல் திட்ட அறிக்கை தான். இதை இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மேலும் 3 நாட்களுக்கு இழுத்துவிடுவார்கள். காவிரி இல்லாததால் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது, அதன் பிறகு சம்பா சாகுபடியும் போய்விடும். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பாதகமான தீர்ப்பு தானே தவிர வேறு எதுவும் இல்லை என்றும் அய்யாகண்ணு கூறியுள்ளார்.