செப்.12-ல் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்- தமிழக தலைமைச் செயலாளர் உள்பட மூவர் பங்கேற்பு!
சென்னை: டெல்லியில் வரும் 12-ந் தேதி நடைபெறும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் உட்பட் 3 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 15,000 கனடி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை என்பது தமிழகத்தின் புகார்.
கர்நாடகா போராட்டம்
இது தொடர்பாக காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு முறையிட்டிருந்தது. இதனிடையே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் போராடங்கள் நடைபெற்று வருகின்றன.
சித்தராமையா கடிதம்
இதனால் காவிரி தொடர்புடைய மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார். இது நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் பேச்சுவார்த்தை நடத்துவதா? என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லியில் கண்காணிப்புக் குழு கூட்டம்
தற்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நிலவும் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்பாக 12-ந் தேதி காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தை டெல்லியில் மத்திய அரசு கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட காவிரி பாயும் மாநில பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
ராமமோகன் ராவ் பங்கேற்பு
இந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பப் பிரிவு ஆலோசகர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.