காவிரி போராட்ட எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் லூப் சாலை மூடல்
காவிரி போராட்ட எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள லூப் சாலை மூடப்பட்டுள்ளது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய்ம அமைக்க கோரி நேற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டது. அதே போல் பட்டினப்பாக்கம் லூப் சாலையும் மூடப்பட்டது.
காவிரி நதி நீர் பங்கீட்டுக்காக திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த கெடுவும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. சென்னை மெரினா, பெசன்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கடற்கரையை மூடினர்
இதனிடையே ஜல்லிக்கட்டுக்காக போராடியதை போல் நீருக்காக போராட வேண்டும் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவியுள்ளதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையை போலீஸார் மூடினர்.
அனுமதியில்லை
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடற்கரைக்குள் நுழைய போலீஸ் அனுமதிக்கவில்லை.
சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி செய்ய அனுமதி தரப்படவில்லை.
மீன் வியாபாரம்
கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையில் மட்டுமே நடைபயிற்சி செய்ய அனுமதி அளித்துள்ளனர். மேலும் பட்டினப்பாக்கம் லூப் சாலையும் மூடப்பட்டுவிட்டது. இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வியாபாரம் காலை 5.30 மணிக்கு தொடங்கிவிடும்.
பட்டினப்பாக்கம் லூப் சாலை
இங்கு ஏராளமானோர் மீன் வாங்க வருவர். இதை சாக்காக வைத்துக் கொண்டு போராட்டம் நடத்த கூடும் என்பதால் இந்த சாலையும் மூடப்பட்டது. இதனால் மீன் வியாபாரம் நடைபெறவில்லை. மீனவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.