காவிரி போராட்ட எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல இன்றும் தடை
காவிரி போராட்ட எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை சாலைக்குள் இன்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய்ம அமைக்க கோரி சனிக்கிழமை இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு இன்று 2-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டது.
காவிரி நதி நீர் பங்கீட்டுக்காக திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த கெடுவும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. சென்னை மெரினா, பெசன்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கடற்கரையை மூடினர்
இதனிடையே ஜல்லிக்கட்டுக்காக போராடியதை போல் நீருக்காக போராட வேண்டும் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவியுள்ளதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையை போலீஸார் மூடினர்.
நடைபயிற்சி
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடற்கரைக்குள் நுழைய போலீஸ் அனுமதிக்கவில்லை.
சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி செய்ய அனுமதி தரப்படவில்லை.
இன்று அனுமதி மறுப்பு
கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையில் மட்டுமே நடைபயிற்சி செய்ய அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் கடற்கரைக்கு செல்ல இன்று 2-ஆவது நாளாக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் எச்சரிக்கை
மெரினா கடற்கரைக்கு செல்வோரை போலீஸார் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும் குடும்பத்துடன் கடற்கரைக்கு செல்லும் பொதுமக்களுக்கு யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்று காவல் துறை இணை ஆணையர் அன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.