காவிரி பிரச்சனை: புதுவையிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. நாராயணசாமி அறிவிப்பு
காவிரி பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருக்க வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: காவிரி பிரச்சனை தொடர்பாக தேவைப்பட்டால் புதுவையிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நவம்பர் 19ம் தேதி அன்று புதுச்சேரி மாநிலம் நெல்லித் தோப்பு தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
எம்எல்ஏ ஆகாமல் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நாராயணசாமி 6 மாதத்திற்கு தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே, நாராயணசாமி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அந்தத் தொகுதியின் எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா செய்தார். இந்நிலையில், இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நெல்லித்தோப்பு தொகுதியில் புதுவை முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.
நெல்லித் தோப்பு இடைத் தேர்தலில் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் முதல்வர் நாராயணசாமி ஈடுபட்டுள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நாராயணசாமி செய்தியாளர்களிடம், தமிழக அரசு காவிரி பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் தேவைப்பட்டால் புதுச்சேரியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு முடிவு எட்டப்படும் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.