திருச்சியில் பொங்காத காவிரி... வாட்டர்கேனில் நடந்த ஆடிப்பெருக்கு - வீடியோ
திருச்சியில் காவிரி ஆறு வறண்டு போனதால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. வாட்டர்கேனில் தண்ணீர் கொண்டு வந்து ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.
திருச்சி: காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால் நடப்பாண்டு ஆடிப்பெருக்கு விழா களையிழந்து போனது. வறண்டு கிடந்த காவிரி ஆற்றின் மணலில் படையலிட்டு வழிபட்டனர்.
தமிழகத்தின் காவிரி நதி ஓடும் சேலம்,ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.
ஆற்றங்கரையில் வாழை இலையில் தேங்காய், பழங்கள், பூ, காதோலை கருகமணி வைத்து பூஜை செய்து காவிரி நீர் பெருக்கெடுத்து ஓட வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வழிபாடு நடத்துவார்கள்.
மேலும், சுமங்கலிப் பெண்கள் அன்று தாலியை மாற்றி புதுதாலிக் கயிறு அணிந்துகொள்வார்கள். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் காவிரிக் கரையினில் தாலி பெருக்கிக் கட்டிக்கொள்வார்கள். ஆகையால் குடும்பம் குடும்பமாக வந்து காவிரி ஆற்றில் கூடி வழிபாடு நடத்தி மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் சரிவர திறந்து விடப்படாத காரணத்தால், ஆடிப்பெருக்கு விழா பொழிவு இழந்து காணப்படுகிறது. மேட்டுர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட குறைந்தளவு நீர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை வந்தடையாத காரணத்தால் ஆடிப் பெருக்கு விழாவில் பெண்கள் சம்பிரதாயமாகச் செய்யும் தாலியை ஆற்றில் விட்டு, புதுதாலிக் கட்டிக்கொள்ளும் நிகழ்வில் ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் வெறும் மணலில் தாலியை விட்டுச் சென்ற அவலம் நிகழ்ந்தது.
திருச்சி அம்மா மண்டபம், கல்லணை, முக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் இல்லாத காரணத்தால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. மக்கள் பெரிய வாட்டர் கேன்களில் தண்ணீரைச் சுமந்து சென்று காவிரிக் கரையில் வைத்து வழிபாடு நடத்தினர்.