காவிரிக்காக தமிழக நடிகர்கள் குரல் கொடுப்பார்களா?: ரஜினி உண்ணாவிரதம் இருக்க விவசாயிகள் அழைப்பு
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக நடிகர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. இந்த பிரச்சினையில் முக்கிய முடிவெடுக்க நடிகர்கள் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது.
உச்சநீதிமன்றத்தில் உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு கனத்த இதயத்துடன் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.. கர்நாடக அமைப்புகள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். முழு அடைப்புப் போராட்டத்தின் போது கன்னட நடிகர் நடிகைகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
காவேரி எங்களுக்கு மட்டுமே சொந்தம்... நாங்கள் விட மாட்டோம் என்றும் பேசினார்கள். எங்களுக்கே குடிக்க தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும் போது நாங்கள் எப்படி தண்ணீர் தருவோம் என்றும் கேட்டு போராட்டம் நடத்தினர் கன்னட நடிகர்கள்.
ரஜினி ஆதரவு தருவாரா?
தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக, நடிகர் ரஜினி குரல் கொடுக்க வேண்டும்; உண்ணாவிரதம் இருக்க வேண்டும் எனவும், ரசிகர்கள், கோரி வருகின்றனர். கர்நாடகாவில் கண்டக்டராக இருந்த ரஜினியை தமிழக மக்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளனர் என்பது விவசாயிகளின் கருத்தாகும்.
விவசாயிகள் கொந்தளிப்பு
'ராஜகுமாரா' என்ற கன்னட படத்தில் நடிக்கும், நடிகர் சரத்குமாருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில், நடிகர், நடிகையர் போராட்டத்தில், முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் பங்கேற்றுள்ளார்; அவருடன், சரத்குமார் இணைந்து நடித்தது, தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட தலைக்குனிவு என்று விவசாயிகள் கொந்தளித்து வருகின்றனர்.
சரத்குமாருக்கு எதிர்ப்பு
சரத்குமார், சினிமா கலைஞர் மட்டுமல்ல; அவர், கட்சிக்கும் தலைவர், எம்.பி, எம்.எல்.ஏ., பதவிகளை வகித்தவர். தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அவர், தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் கன்னட படத்தில் நடிப்பதை ஏற்க முடியாது; அவரது படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறினார்.
சீமான் எங்கே
தங்களின் படங்கள், கர்நாடகாவில் தடுக்கப்படும் என்பதற்காக, தமிழ் திரை உலகினர், காவிரி பிரச்னை குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். அரசியல் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் நடிகர் சீமான் கூட, காவிரி விஷயத்தில் அமைதி காப்பது அதிர்ச்சியாக உள்ளது என்று தமிழக விவசாயிகள் கூறிவருகின்றனர்.
விவசாயிகள் வலியுறுத்தல்
மதத்திற்காகவும், ஜாதிக்காகவும், தான் நேசிக்கிற சினிமா நடிகனுக்காகவும், பொங்கி எழும் தமிழக மக்கள், காவிரி பிரச்னையில் அமைதியாக இருப்பது வேதனையாக உள்ளது. காவிரி பிரச்னையில் உரிமைக்காக போராடும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஒட்டு மொத்த தமிழக மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் திரை உலக நடிகர்கள்
காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்திற்கு எதிராக, கன்னட நடிகர், நடிகையர் போர்க்கொடி உயர்த்திய நிலையில், தென் இந்திய நடிகர் சங்கத்தின் 11வது செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் செயற்குழு உறுப்பினர்கள் 24 பேரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம் அறிவிப்பு?
இன்று நடைபெறும் கூட்டத்தில் காவிரி பிரச்சனையில், தமிழகத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதில் நடிகர் சங்கம் சார்பில் கர்நாடகத்துக்கு எந்த வகையில் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது பற்றியும் முடிவு செய்யப்படுகிறது. காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதா? உண்ணாவிரதம் இருப்பதா? அல்லது எந்த முறையில் கர்நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.