தமிழக-கர்நாடக எல்லையில் இப்ப இது தான் நடக்கிறது: லாரி டிரைவர்கள் கவலை
ஓசூர்: தமிழக-கர்நாடக எல்லையில் வைத்து அத்தியாவசியப் பொருட்கள் அந்தந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகளில் மாற்றப்படுகின்றன.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 5ம் தேதி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அன்று இரவு முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பல லாரிகளும் இயங்கவில்லை.
போலீஸ் பாதுகாப்புடன் அம்மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 9ம் தேதி நடைபெற்ற கர்நாடகா பந்திற்கு பிறகு கர்நாடக பேருந்துகளும் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை.
தமிழக-கர்நாடக எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் புளிஞ்சூர் சோதனைச்சாவடி 6 நாட்களுக்கு முன்பு அடைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு மாநில லாரிகளும், வாகனங்களும் எல்லைகளில் நிறுத்தப்பட்டு வருகின்றன.
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அந்தந்த மாநில லாரிகளில் மாற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. எல்லையில் லாரிகளில் பொருட்களை ஏற்றி, இறக்க கூலி அதிகமாக இருப்பதால் இரு மடங்கு நஷ்டம் ஏற்படுகிறது என லாரி டிரைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கர்நாடக பேருந்துகள் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் பயணிகளை இறக்கி விடுகின்றன. பயணிகள் சோதனைச்சாவடியில் இருந்து 10 கிலோமீட்டர் நடந்து திம்பம் செல்கிறார்கள். இந்நிலையில் சோதனைச்சாவடியில் இருந்து திம்பம் வரை தமிழக பேருந்துகளை இயக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூர், மைசூர், சாம்ராஜ்நகர் செல்ல சத்தியமங்கலம் சரியான வழி என்றாலும் அங்குள்ள சாலைகளில் வாகனங்கள் தேங்கி நிற்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.