நெருங்கும் ஹைகோர்ட் கெடு... ராமஜெயம் கொலைவழக்கில் சிக்குவார்களா குற்றவாளிகள்? சி.பி.ஐ.க்கு போகுமா?
மதுரை: ராமஜெயம் கொலைவழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டோம்... இதே நெருங்கிவிட்டோம்... ஆதாரங்களை சேகரிக்க அவகாசம் தேவை என்று மூன்றாண்டுகளாக வாய்தா கேட்டு வருகிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான கே.என்.ராம ஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம்தேதி அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்மநபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கொலைவழக்கில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கவே முடியாமல் திணரும் சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரிகளை வறுத்தெடுத்துவிட்டார் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து.
கொந்தளித்த நீதிபதி
உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்ய இத்தனை ஆண்டுகள் காலதாமதம் ஏன்? கடந்த மூன்று ஆண்டுகளாகக் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை யார் குற்றவாளி என்பதைக்கூட உங்களால் முடிவு செய்ய முடியவில்லை. ஆனால், நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் கொலை தொடர்பாக முக்கியத் தகவல் கிடைத்துள்ளது என்று தவறாமல் அறிக்கை மட்டும் தாக்கல் செய்கிறீர்கள். நீங்கள் இன்னும் ஆங்கிலேயர் காலத்து முறைகளைப் பயன்படுத்தி விசாரணை செய்து வருகிறீர்கள் என்று கொந்தளித்து விட்டார் நீதிபதி.
ஜூலை 24 கெடு
விஞ்ஞான ரீதியாக விசாரணை நடத்துவதில்லை. ஆனால், குற்றவாளிகள் விரைவாக செயல்படுகின்றனர். தொழில்நுட்பங்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்த வழக்கில் தற்போது தடயங்கள் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணை சரியாக நடைபெறவில்லை. மூன்று ஆண்டுகளாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாதபோது மறுபடியும் அவகாசம் அளித்தால் ஒரு பயனும் இல்லை' என்று காட்டமாகச் சொல்லிவிட்டு ஜூலை 24ம் தேதிக்கு கெடு வைத்து அறிவித்தார்!"
சூடுபிடிக்கும் விசாரணை
நீதிபதியிடம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என தெரிவித்தனர். நீதிமன்றம் விதித்த கெடு முடிய இன்னும் 35 நாட்களே இருப்பதால் சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையிலான போலீஸ் படை உச்சகட்ட விசாரணையில் இறங்கியுள்ளது.
1000 பேரிடம் விசாரணை
இந்த கொலை வழக்கில் இதுவரை சுமார் 1000 பிரமுகர்கள் ரவுடிகள், தொழில் அதிபர்கள், கட்சியினர் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தி ராமஜெயத்தின் செல்போன்களில் பதிவாகியுள்ள நம்பர்கள், ராமஜெயம் பகைத்து கொண்ட நபர்கள் என பட்டியலை தயாரித்து விசாரித்துள்ளனர்.
சொதப்பல் விசாரணை
அரசியல், தொழில் போட்டி, முன்பகை, பெண்கள் பிரச்சனை என பல விதங்களில் சந்தேகங்கள் கூறப்பட்டதால் இது பற்றி அனைத்து கோணங்களிலும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு சமீபத்தில் போனில் 2 விஷயங்கள் தொடர்பாக முக்கிய தகவல் வந்துள்ளதாம்.
இதை தொடர்ந்து இந்த புதிய தகவலின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனராம்.
வழக்கில் சிக்கும் மூவர்
இந்த தகவலின் அடிப்படையில் முக்கிய பிரமுகர்கள் 3 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பு இது தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இறங்கியுள்ள போலீசார் வழக்கு தொடர்பான விசாரணையை ரகசியமாக நடத்தி வருகின்றனராம்.
குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்
இது தொடர்பான தகவலை யாரிடமும் தெரிவிக்க முடியாது. 2 புதிய தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை நெருங்கி வருகிறோம். குற்றவாளிகள் உறுதியானதும் தகவல் தெரிவிப்போம் என விசாரணையில் உள்ள அதிகாரிகள் பழைய பல்லவியை பாடி வருகின்றனர்.
போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு
இது ஒருபுறம் இருக்க ராமஜெயம் கொலையில் போலீஸ் அதிகாரிகள் சிலரே சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கொலை தொடர்பாக ஆரம்பத்தில் சில போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களையே மறுபடியும் அழைத்து விசாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏதாவது முக்கியக் கோணத்தில் விசாரிக்கக் கிளம்பினால், எங்கிருந்தோ முட்டுக்கட்டை விழுகிறதாம். போலீஸின் முக்கியப் பதவியில் இருக்கிற அதிகாரிகளே தடைபோடுகிறார்களாம்.
மலைச்சாமியை மாற்றணும்
சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பியான மலைச்சாமி, கொலை வழக்கில் சந்தேகப்படுகிறவர்களை ஏன் விஞ்ஞான ஆய்வுகளுக்கு அனுப்பவில்லை?' என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மலைச்சாமியை மாற்றி, வேறு ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்தால்தான் வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
சி.பி.ஐ. விசாரணை
எது எப்படியோ ஜூலை 24ம் தேதிக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்படுவது உறுதி என்கின்றனர். எனவேதான் திருச்சிக்கு முன்கூட்டியே ரகசியமாக வந்துள்ளசி.பி.ஐ அதிகாரிகள் கொலை வழக்கு விசாரணையை கவனிக்க ஆரம்பித்துள்ளனராம். சி.பி.ஐ ட்ரீட்மெண்டில் விசாரித்தால் மட்டுமே ராமஜெயத்தை கொலை செய்தவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கமுடியும் என்று ராமஜெயத்தின் மனைவி மட்டுமல்ல போலீஸ் அதிகாரிகள் சிலரே கூறத்தொடங்கியுள்ளனராம்.