ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மேலும் 2 மாதம் அவகாசம்
மதுரை: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க மேலும் 2 மாதம் சிபிசிஐடி போலீசுக்கு அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், 50. கடந்த, 2012, மார்ச், 29ம் தேதி, கொடூரமாக கொல்லப்பட்டார். ஆசிட் ஊற்றப்பட்டு கட்டுக்கம்பிகளால் அவரது உடல் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்தது. இந்தக் கொலை வழக்கில் துப்பு துலக்கி வரும் சிபிசிஐடி போலீசார் சுமார் ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 3 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், வழக்கு விசாரணயை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஜூலை 24ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, கொலையாளியை நெருங்கிவிட்டதாக தெரிவித்த சிபிசிஐடி போலீசார், மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது, சிபிசிஐடியின் விசாரணையைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி, மேலும் 3 மாதங்கள் இறுதி அவகாசம் அளித்து, அக்டோபர் 28ம் தேதிக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து, வழக்கை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சிபிசிஐடி போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் இருந்தவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினர். கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதிவரை அவரது உதவியாளர்கள் நந்தகுமார், கேபிள் மோகன் ஆகியோரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இரண்டு நாட்களாக, சென்னை, சிபிஐ அலுவலகத்தில், இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த கெடு இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி எஸ்.பி.அன்பு நேரில் ஆஜராகி இதுவரை நடந்த விசாரணை அறிக்கை தொடர்பாக சீலிடப்பட்ட கவரை மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் நீதிபதி நாகமுத்து முன்பாக தாக்கல் செய்தார்.
மேலும் சிலரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவகாசம் கேட்டார் எஸ்.பி. அன்பு, இதனையடுத்து அறிக்கையில் சில பயனுள்ள தகவல்கள் இருப்பதாக கருத்து தெரிவித்த நீதிபதி நாகமுத்து, சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கி, வழக்கை டிசம்பர் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.